Sunday, March 30, 2014

...கற்க கசடற பகுதி 9


"அய்யோ .. அம்மா..
டேய்.. யாருடா அது.. உள்ள ஓடறது.. நில்லுங்கடா.."

"எவன் டா அவன் வயித்த மிதுசுட்டு ஓடறது? நில்லுங்கடாங்கறேன்!"
விளக்குகள் பளீரென உயிர் பெற வாட்ச்மேன் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு கருப்பு சாமி மாதிரி எழுந்தார்.


அதற்குள்
ராகவும் காமேஷும்  எங்கோ
பதுங்கி விட..

அகில் மட்டும்
அகப்பட்டான்
வாட்ச்மேனிடம்.

"நில்லுடாங்கறேன்..."

"....."

அறை எண்  402

"டக்..டக்.. டக்.. தம்பிகளா.. தூங்குன வரைக்கும் போதும். கொஞ்சம் கதவ திறங்க.." தட்டினார் வார்டன்..

சப்தமில்லை..

"டக்.. டக்.. டக்.."

சப்தமில்லை..

"டக்.டக்.டக்..டக் டக் டக் டக்..இப்ப கதவ தெறக்கப் போறீங்களா? இல்ல ஒடச்சுட்டு உள்ள வரவா?" வார்டன் உஷ்ணமாக,

"யாரு?" தூங்கி வழிந்த முகத்துடன் கொட்டாவி விட்டபடியே வந்து தன் பெருத்த உடலை முறுக்கியபடி கதவு திறந்தான் மனோஜ்..

"யாரு..?" கண்களை கூசிய மாதிரி வைத்துக் கொண்டு லைட் போட்டான்..

"சார்.. என்ன சார் இந்த நேரத்துல..?"

உள்ளே எல்லோரும் போர்வை போர்த்தி  தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்த வார்டன் , "என்ன தம்பி பண்றீங்க..?"

தூக்கம் கலைந்த எரிச்சல் முகத்தில் படற , "தூங்கிகிட்டு இருந்தேன் சார்.."

"தம்பி.. எப்பவும் ஷு  போட்டுட்டு தூங்கறது தான் வழக்கமோ? அடிங்க.. கீழே வாட்ச்மேன  மிதிச்சு ஓடி வந்துட்டு நடிக்கறீங்களாடா . எங்கடா போயிட்டு வரீங்க? எழுந்திரிங்கடா.."

"சார். யாரு நம்ம வாட்ச்மேனையா? நாங்களா? மிதிச்சா? ஓடியா? ச்சேச்சே.."

மனோஜ் பர்பார்மன்சில் பொறுமை இழந்த வார்டன்,  அகிலைப் பிடித்து முன்னே  நிறுத்தினார்.

மனோஜ் செய்வதறியாது விழித்துக் கொண்டிருக்க், "கொர் .. கொர் .." சப்த்தமாய் குறட்டை ஒரு மூடிய போர்வைக்குள்ளிருந்து.

"இதுல கொறட்ட  வேற.." கடுப்பான வார்டன் தடியை வேகமாய் வீச,

"அம்மா.." பதறி எழுந்தான் காமேஷ்..

அந்த நேரத்திலும் சிரிப்பு வந்து விட்டது அகிலுக்கு..

"உங்கள  மாதிரி எத்தன பேர  பார்த்திருப்பேன்.. எழுந்திரிங்கடா..இப்ப உள்ள வந்தேனு வை .."

பதறி எழுந்தது அறை..

"நீ எந்த ரூம் டா.. பேர் என்ன" கட்டிலுக்கு அடியில் பதுங்கிய ராவவை வெளியே இழுத்தார்..

"சார்.. சார்.."

"நாளைக்கு எல்லாரும் வந்து என்ன ஆபிஸ்ல பாருங்க.. எவனாவுது டேக்கா குடுத்தீங்க அப்புறம் நேரா பிரின்சிபால் தான். காலேஜ் சேர்ந்து ஒரு வாரம் ஆகல என்ன கொழுப்பு.."

"......சரி இது தான் லாஸ்ட் வார்னிங்..போங்க.." மறுநாள் இரண்டு  மணி நேர சொற்பொழிவுக்குப்  பிறகு ஒரு வழியாக முடித்தார் வார்டன்.

"சார் இவனுகள சும்மா விடக்கூடாது சார்.. வயத்திலேயே மிதிச்டானுவ..பிரின்ஸ்பால் கிட்ட கூட்டிட்டு போனா தான் புத்தி வரும்.." தூபம் போட்டார் வாட்ச்மேன்..

" அதெல்லாம் வேணாங்க .. பஸ்ட் டைம் தான .. தெரியாம செஞ்சிருபாணுக.. போங்க ஒரு அப்பலாஜி லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு போய்  படிக்கிற வழிய பாருங்க..இனி இப்படி எதாவுது நடந்தது .. ஹாஸ்ட்டல விட்டு தொரத்தி விட்டுருவேன்.. ராஸ்கல்ஸ்.." அனுப்பி வைத்தார்..

"சார் வயிறெல்லாம் வலிக்குது. மத்தியானம் லீவ் வேணும்.." வாட்ச்மேனின் தேய்ந்த குரல் கேட்க விடை பெற்றனர்..

"அகில்..நீயேன்டா .. வாட்ச்மேன வயிருலயே   மிதிச்ச? எல்லாம் உன்னால தான்." லெட்டர் எழுதும் போது அகிலை எரிச்சலுடன் முறைத்தான் விக்ரம்..

"மச்சி .. நான் நேத்தே சொன்னனே.. சத்தியமா  வாட்ச்மேன நான் மிதிக்கல.."

"அப்புறம்..வேற யாரு மிதிச்சது..? உங்க தாத்தாவா?" மனோஜ்

"சரி மிதிச்சது தான்  மிதிச்ச எங்கள ஏன்டா மாட்டிவிட்ட.."விக்ரம்

"ஏன்  மச்சி ..எங்க கூடவே வேகமா ஓடி வந்திருக்கலாம்  இல்ல " காமேஷ்

 ஓ  அப்ப நம்ம  கால்ல கொலகொலன்னு பட்டது வாட்ச்மேன் தொப்பையா? நல்ல வேள எவனும் பாக்கல, இவனுக்கும் தெரியல.. இப்படியே மெய்ண்டைன் பண்ணுவோம் என்று எண்ணியபடி, "சரி விடு மச்சி .. கண்ணு தெரியாம மிதுச்சிருப்பான்..என்ன பண்ண முடியும்.. கொஞ்சம் பாத்து வந்துருக்கலாம் .." என்றான் ராகவ்..

"கண்ணு தெரியாம..? போடங்க..கண்ணாயிரம்.. கண்ணு தெரியலன ஐ டெஸ்ட் பண்ணி ஒரு கண்ணாடி போட்டுக்கோ.. இப்படி கண்டவுங்கள மிதிச்சு  எங்கள மாட்டி விடாத.." மனோஜ் கோபமாக..

"டேய்.. வேணா..நான் சொல்றேன் வாட்ச்மேன நான் மிதிக்கலனு ."

"என்ன வேணா.. போடா கண்ணாயிரம்.." நக்கலாய் சிரித்தான் மனோஜ்

"கண்ஸ்" சுருக்கிச் சிரித்தான் விக்ரம்..

கோரஸில் சிரித்தது கூட்டம்..

"டேய்.. நான் .."

"நல்ல வேள மச்சி.. நீ ரெண்டு இன்ச் கீழே மிதிக்கல..அப்பறம்  வாட்ச்மேனுக்கு ப்ரீயா குடும்ப கட்டுப்பாடு பண்ணிருப்ப..!! அப்புறம் டாக்டர் கரடி முத்து குடும்பக் கட்டுப்பாடு ஸ்பெசளிஸ்ட் னு  போர்டு போட்டிருக்கணும்.." எங்கிருந்தோ யோசித்து சட்டென அசிங்கப்  படுத்தினான் ராகவ்..

குதித்தது கூட்டம்..
அழுதது அகில் மனம்..

நடந்த சம்பவத்தின் எரிச்சலால்  மறுபடி ஒரு முறை காமெடியன் ஆக்கப்பட்டான் அகில் ..
ஆனால் இந்த முறை தடுக்க வாய்ப்பின்றி..

ரூமுக்கு வந்து எப்.எம் மை போட்டு , அனைவரும் அமர்ந்தனர்..

"மின்சாரக் கண்ணா.. என் மன்னா .." நித்யஸ்ரீ மனோஜுக்கு கலாய்க்க அடுத்த லீட் எடுத்துக் கொடுத்தார்..

 "மின்சாரக் கண்ணா" அகிலைப்  பார்த்துச்  சிரித்தான் மனோஜ் ..

வழக்கம் போலவே சிரிக்கத் தொடங்கிவிட்டது கூட்டம்..

"மச்சி சத்தியாமா நான் மிதிக்கல நம்புங்கடா.. ப்ளீஸ் "

"சரி மிதிக்கல.. எங்கள எதுக்கு மாட்டி விட்ட?" ராகவின் கேள்விக்குள் ஒளிந்திருந்த உண்மை அர்த்தம் யாருக்கும் புரியவில்லை

"இல்ல மச்சி..நம்ம எல்லாரும் ஓடுரத வாட்ச்மேன்  பாத்துட்டான்.. எங்கிட்ட ரூம் நம்பர் மட்டும் தான் கேட்டான். சொன்னேன்.."

"போடா.. ரீல் விடாத.."

"மின்சாரக் கண்ணா.. ரீல்  விடுவதில்  மன்னா." ராகவ் பாடத் தொடங்க சிரிப்பின் உச்சிக்கு சென்று விட்டது கூட்டம்..

"டேய்.. வேணாம்.."

"என்ன வேணா..? வேணும்.. நீ பாடு மச்சி.."

"மின்சாரக் கண்ணா..
ரீல்  விடுவதில்  மன்னா..
உன் ரீலை எங்களால்
தாங்க முடியல.."

சிரிப்புக்கும் கிண்டலுக்கும் இடையே..
பேச வழியின்றி..
செய்வதறியாது அறையை விட்டு வெளியேறி
மொட்டை மாடிக்குச்  சென்றான் அகில்
கோபம் அவன் இதயத்தை கனமாக்கியது.

அதற்கப்புரமாய்
அகில் எது செய்தாலும்
என்ன சொன்னாலும்
கலாய்க்க முடிவெடுத்து விட்டது
அந்தக் கூட்டம்..

சினிமா தாண்டி,
அவ்வப்போது
இலக்கியம், சமூகம்,கவிதை, சரித்திரம்
என பேசும் அகிலுக்கு
ரீல்' லூர் என்றும் புதுப் பெயர் வைத்தனர்..

நாட்கள் நகர்ந்தன..

அவன் விடுதி வாழ்க்கை இப்படியே  தொடர்ந்தது.
மொட்டை மாடியில் அல்லது
அறைக்குள் நண்பர்களால்
மொட்டை அடிக்கப் படுவதில்!

ஒரு நாள் அப்படித்தான்..

தொடரும்... 

No comments:

Post a Comment